×

நாட்டை மீட்டெடுக்க தலைவர் ராகுல் புறப்பட்டுள்ளார் இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை பாஜக தழுவும்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் செல்வபெருந்தகை பேச்சு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜ மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டதை கண்டித்தும், ரூ.1823.08 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஒன்றிய பாஜ அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், முத்தழகன், இலக்கிய அணி மாநில தலைவர் பி.எஸ்.புத்தன், ஆர்.டி.ஐ.பிரிவு துணை தலைவர் மயிலை தரணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் செல்வபெருந்தகை பேசியதாவது: பாஜக நேற்று முளைத்த காளான். நேற்று முளைத்த காளானின் தலைவர்களால் காங்கிரஸை அழித்து விட முடியுமா?. . 135 கோடி ரூபாய் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டிருக்கிறது. மோடி அரசின் நிதி அமைச்சகத்தால் திருடப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் போது எங்கள் பணத்தை திருடி உள்ளீர்கள்.

இது எவ்வளவு பெரிய அவமானம். தேசிய அவமானமாக ஐநா சபை பார்க்கிறது. இப்போது ஒரு தாக்கீது அனுப்பியிருக்கிறார்கள். 1823 கோடி ரூபாய் அபராதம் விதிக்கிறோம். கட்டுங்கள் என்கிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு விதிவிலக்கு இருக்கிறது. தேர்தல் ஆணையத்திலும் வருடம், வருடம் இந்த அறிவிப்பை செய்கிறோம். தாக்கல் செய்த பிறகும் அபராதம் விதிக்கிறீர்கள் என்றால் எவ்வளவு பெரிய பாசிசம், இருக்கிறது பாஜகவுக்கு. காங்கிரஸ் பேரியக்கம் ஒரு போதும் தப்பு செய்யாது. இந்த தேசத்தின் சொத்து காங்கிரஸ்.

இந்த தேசத்தின் விடுதலை மூச்சுக்காக காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. நாம் எங்கும் தவறு செய்யவில்லை. பாஜவின் கணக்கு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது எவன் செக் கொடுத்தான் என்பது கிடையாது. யார் பெயரும் கிடையாது. எந்த எண்ணும் கிடையாது. மொட்டையாக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரூ.4613 கோடி பாஜதான் ஐடிக்கு செலுத்த வேண்டும். அதை கேட்கவில்லை. அதை பற்றி தகவல் இல்லை. இப்போது நாங்கள் வழக்கு தொடர உள்ளோம்.

நாங்கள் சரியாக கணக்கு தாக்கல் செய்து இருக்கிறோம். எங்களுக்கு அபராதம் என்றால், உங்களுக்கு உண்மையாகவே ரூ.4613 கோடி அபராதம் விதிக்க வேண்டும். தேர்தல் பத்திரம் தகவல் வெளியே வந்து இந்தியா முழுவதும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இளைஞர்கள் எல்லாம் கேட்கிறார்கள். இப்படி ஒரு ஊழல் இருக்குமா என்று.

உடனே அரவிந்த் கெஜ்ரிவாலை இரவோடு இரவாக கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை தழுவ போகிறீர்கள். படுதோல்வி அடைய போகிறீர்கள். இந்த நாட்டை மீட்டெடுக்க எங்கள் தலைவர் ராகுல்காந்தி புறப்பட்டுள்ளார். மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள் பாஜவை தோற்கடிக்க வேண்டும் என்று. ஆட்சி மாற்றம் ஏற்படும். ராகுல் பிரதமராக வருவார். உங்களுடைய பாசிசத்துக்கும், பாசிச ஆட்சிக்கும் முடிவு கட்டும் நேரம் வந்து விடும்.

The post நாட்டை மீட்டெடுக்க தலைவர் ராகுல் புறப்பட்டுள்ளார் இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை பாஜக தழுவும்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் செல்வபெருந்தகை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Rahul ,BJP ,Chennai ,Selvaperunthagai ,All India Congress party ,Union BJP government ,Tamil Nadu Congress ,Dinakaran ,
× RELATED வயநாடு தொகுதியை தொடர்ந்து...